செந்தமிழ் நாடெனும் போதினிலே --பாரதியார்

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி என
மேவிய யாறு பலவோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில் நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம் இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

No comments: